அரிதான படைப்பாளியும் அதிர்ச்சிகரமான ஏமாற்றமும்
-ச.கிருஷ்ணன்
அண்மையில் வெளியான படங்களில் மிகப் பரபரப்பாக எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான
படம் இரண்டாம் உலகம்.
இந்தப் படத்தின் நாயகன் அடுத்தடுத்த வெற்றிப் படங்களில்
நடித்துவரும் ஆர்யா.
நாயகி தமிழில் அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டுபோயிருக்கும் அன்ஷ்கா. ஆனால் அதற்கு முன்பு வெளியான நட்சத்திர நடிகர்களின் படங்களையெல்லாம்
பின்னுக்குத் தள்ளிவிட்டு ஆயிரக் கணக்கான திரைய்ரங்குகளில் வெளியானது
பெரிய நட்சத்திர மதிப்பு இல்லாத இந்தப் படத்துக்கு. இத்தனை திரையரங்குகள் கிடைத்ததற்கு காரணம் இந்தப் படத்தின்
மீது இருந்த எதிர்பார்ப்புதான். அந்த
எதிர்பார்பை ஏற்படுவதற்கான ஒரே காரணம்
இந்தப் படத்தின் இயக்குனர் செல்வராகவன்.
பொதுவாக தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கிக்கொண்டிருக்கும்
இயக்குனர்களுக்கு நட்சத்திர நடிகர்களுக்கு இருக்கும் வரவேற்பு இருக்கவே செய்யும். இயக்குனர்
ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் இந்த வரிசையில் வருவர். இயக்குனர்
தரணி, கவுதம் மேனன் ஆகியோரும் ஒரு காலத்தில் இந்த வரிசையில்
இடம்பெற்றிருந்தனார். ஆனால் ஒரு சில தோல்விகளுக்குப் பிறகு அவர்களின் படங்களுக்கு மதிப்பு
இருக்கிறதே தவிர பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருப்பதாகச் சொல்ல முடியாது.
தமிழ் சினிமாவில் இரண்டே இரண்டு இயக்குனர்களுக்குத்தான்
வெற்றி தோல்வியினால் பாதிக்கப்படாத எதிர்பார்ப்பும் மரியாதையும் இருந்துவருகிறது. ஒருவர்
மணி ரத்னம். இன்னொருவர் செல்வராகவன். அவர் தமிழில் இயக்கிய கடைசி மூன்று படங்கள் வணி
வெற்றியைப் பெறவில்லை. ஆனாலும் அவரது அண்மைய படைப்பான இரண்டாம் உலகத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு
இருந்ததை வைத்து அவர் மிக அரிதான சிறப்புகளைக் கொண்ட இயக்குனர் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
இரண்டாம் உலகம் படம் வணிக ரீதியாக தோல்வியடைந்துவிடும்
விளிம்பில் இருக்கிறது. அதைவிட ஏமாற்றத்துக்குரிய சொல்லப்போனால் அதிர்ச்சிகரமான விஷயம்
செல்வராகவனின் மற்ற தோல்விப் படங்களில் இருந்த சிறப்பம்சங்கள் இந்தப் படத்தில் இல்லை
என்பதுதான்.
செல்வராகவனா இப்படி ஒரு படம் கொடுத்தார் . என்று அதிர்ச்சி
இரண்டாம் உலகத்தைப் பார்த்த பலருக்கு ஏற்பட்டது. அடைந்த ரசிகர்கள் ஏராளம்.
பொதுவாக எதிர்பார்ப்புடன் பார்க்கப்பட்ட படம் ஏமாற்றமளித்தால்
”நான் செலவழித்த 120 ரூபாய் வீணாகிவிட்டதே என்ற அடிப்படையில்தான் சமுக வலைதளங்களில்
இளைஞர்கள் வெளியிடும் விமர்சனங்கள் அமைந்திருக்கும். ஆனால் இரண்டாம் உலகம் படம் பற்றிய
பெரும்பாலான இளைஞர்களின் நிலைத்தகவல்கள் “செல்வராகவனிடம் இப்படி ஒரு படத்தை எதிர்பார்க்கவில்லை”
என்ற கருத்தையே பேசின. .
இரண்டாம் உலகம் ஃபேண்டஸி வகையைச் சேர்ந்தது என்பதைத்
தலைப்பே சொல்லிவிடுகிறது. ஃபேண்டஸி வகைப் படங்கள் சினிமா ரசிகர்களுக்கும் புதிதல்ல.
செல்வராகவனுக்கும் புதிதல்ல. அவர் இயக்கி 2010இல் வெளியான ஆயிரத்தில் ஒருவன் படத்தை
ஃபேண்டஸி படம் என்றும் வகைப்படுத்தலாம். எனவே இரண்டாம் உலகத்தில் பின்னியிருப்பார்
செல்வா என்ற எதிர்பார்ப்புடன் திரையரங்குக்குள் நுழைந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
படத்தில் இரண்டு வெவ்வேறு உலகங்களைப் படைக்கிறார் செல்வா.
ஒன்று நாம் வாழும் பூமி. இன்னொன்று இந்த பிரபஞ்சத்தில் பூமியைத் தவிர வேறு கோள்களிலும்
மனித உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் உண்டு என்ற நம்பிக்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட
வேற்று உலகம். தலைப்பு சொல்லும் இரண்டாம் உலகம் என்பது இதுதான்.
நம்பிக்கையில் கட்டமைக்கப்பட்ட உலகம் என்ற கருத்தாக்கமே
இந்தப் படத்தை ஃபேண்டஸி வகைமைக்குள் கொண்டுவருகிறது. ஃபேண்டஸிக்களில் தர்க்க ரீதியான்
ஓட்டைகளைப் பார்க்க வேண்டியதில்லை என்பது பொதுவாகப் பின்பற்றப்படும் விதி. ஏனெனில்
கற்பனையான உலகத்தின் கற்பனை சார்ந்த என்னவேண்டுமானாலும் நடக்கலாம் என்று எடுத்துக்கொள்ளலாம்.
எனவே இரண்டாம் உலகத்தில் ந்டக்கும் விஷயங்களுடன் தர்க்கத்தைத் தொடர்புபடுததிப் பார்க்க
வேண்டாம் என்ற மனநிலைக்குத் தயாராகிறோம்.
ஆனால் தர்க்கத்தை மறக்க வேண்டுமென்றால் சம்பவங்கள் சுவாரஸ்யமாக
இருக்க வேண்டும். இல்லை என்றால் எதற்காக இப்படி ஒரு கற்பனை என்றுதான் தோன்றும். செல்வராகவனின்
கற்பனையில் உருவான உலகத்தில் நடக்கும் நிகழ்வுகள் அந்த எண்ணத்தைத்தான் தோற்றுவிக்கின்றன.
சுவாரஸ்யமில்லாதது மட்டும் இந்த எண்ணத்துக்குக் காரணமல்ல.
செல்வராகவனின் கற்பனை உலகத்தில் புதுமையாக ஒன்றுமே இல்லை. பெண்களை அடிமைகளாக நடத்துவது.
அனைத்துப் பெண்களையும் தன் அந்தப்புரத்தில் சேர்க்க நினைக்கும் மன்னன், அனாதைப் பெண்ணை அனைவரும் இழிவாக நடத்துவது என பூமிக்கும்
பொருந்தும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.
இந்த உலகத்துகே உரித்தான விஷயங்களாக செல்வராகவனின் கற்பனையில்
உதித்தவை யாவும் என்ன?
எதற்காக இப்படி? என்ற அடிப்படைக் கேள்விகளுக்கே பதில் சொல்லவில்லை. நாயகன், நாயகியைத் தவிர அனைவருக்கும் ஆங்கிலேய முகங்கள். ஆனால்
அவர்கள் தமிழ் பேசுகிறார்கள். தமிழ் பேசும் வேற்றுமொழி முகங்கள் என்பது செல்வராகவனின்
கற்பனை என்றால் அதை ஏன் ஆங்கிலேயர்களுடன் சுருக்கிக்கொண்டிருப்பதற்கான் காரணத்தை படத்தி
சொல்லியிருக்க வேண்டும்.
அம்மா என்று ஒரு கடவுள் பாத்திரம் மிகக் குழப்பங்கள்
நிறைந்த பாத்திரமாக இருக்கிறது. முந்தைய செல்வராகவன் படங்களில் ஒரு சில நிமிடங்களுக்கு
வந்துபோகும் பாத்திரங்களின் செய்கைகள் கூட தெளிவான காரண காரியங்களுடன் விவரிக்கபப்ட்டிருக்கும்.
ஆனல் அம்மா கடவுள் யார்.அவர் கடவுள் என்றால் ஏன் எதிர்களிடமிருந்து விடுவித்துக்கொள்ளும்
சக்தி அவருக்கு ஏன் இல்லை. அவருக்கு சக்திகளே இல்லை என்றால் பூமியிலிருக்கும் ஆர்யாவை
இந்த உலககுக்கு வரவழைப்பதும், தன் காரியம்
முடிந்தவுடன் அவரை வேறொரு உலகுக்கு அனுப்பிவைப்பதும் எப்படி? தர்க்கத்தை மறந்த பின்னும் இதுபோன்ற கேள்விகளை மறக்க
முடியவில்லை.
ஏனெனில் எந்த ஒரு வலுவான காரணமும் இல்லாமல் கதையை நகர்த்துவதற்காக
கோர்க்கப்பட்ட நிகழ்வுகளாகவே ’இரண்டாம்’ உலகத்தில் நடக்கும் நிகழ்வுகள் அமைந்திருக்கின்றன.
மனிதர்கள் வாழும் வேறொரு உலகம் என்ற கற்பனையை மட்டும் வைத்துக்கொண்டு எதை வேண்டுமானாலும்
காட்டலாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற துணிச்சல் காண்பிக்கபப்டுபவையும் சொல்லப்படுபவையும்
சுவாரஸ்யமாகவும் இருந்தால்தன் செல்லுபடியாகும். இரண்டாம் உலகத்தில் அது இல்லை என்பதாலேயே
அது பலரை ஈர்க்கவில்லை.
இரண்டாம் உலகம் படத்தை ஆதரிப்பவர்களின் வாதம் இரண்டாம்
உலகம் என்ற கற்பனைக்காகவே இந்தப் படத்தைப் பாராட்ட வேண்டும் என்று தொனியில் அமைந்திருக்கின்றன.
வெள்ளைக்காரன் அவதார் எடுத்தால் வாய் பிளந்து பார்ப்பீர்கள் அதே போன்ற படத்தை தமிழன்
எடுத்தால் நிராகரிப்பீர்கள்” என்று ரசிகர்கள் மிதும் விமர்சகர்கள் மீதும் பழிபோடுகிறார்கள்
இரண்டாம் உலகம் படத்தை ஆதரிப்பவர்கள். அவதாருக்கும் இரண்டாம் உலகத்துக்கும் மனிதர்கள்
வாழும் வேறொரு உலகம் என்ற கற்பனையைத் தவிர வேறொன்றும் பொதுவாக இல்லை. இரண்டாம் உலகம்
ஏன் நிராகரிக்கப்பட்டது என்பதை விளக்க நமக்கு அவதார் தேவையில்லை. அவரத் முந்தைய படமான
ஆயிரத்தில் ஒருவன் படமே போதும்.
ஆயிரத்தில் ஒருவன் குறைகளற்ற படமில்லை என்றாலும் பல வகைகளில்
தமிழ் சினிமாவின் தரத்தையும் ரசிகர்களின் ரசனையையும் உயர்த்திய படம். அல்லது உயர்த்துவதற்கு
நேர்மையாக முயற்சி செய்த படம். அந்தப் படம் வணிக ரீதியாகத் தோல்வி அடைநததாலும் செல்வராகவனின்
திரைவாழ்வில் மிக முக்கியமான படம் என்று அதை அடையாளப்படுத்தலாம். அதற்கான காரணஙகள்
சிலவற்றைப் பார்ப்போம்
செல்வராகவனை அறவே வெறுப்பவரைக் கூட ஆயிரத்தில் ஒருவன்
படத்தின் கதையில் உள்ள பிரம்மாண்டமே ஈர்த்துவிடும்.பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த
சோழர்களின் பரம்பரை அழிந்துவிட்டதாக நாம் நினைத்துக்கொண்டிருக்க அவர்களில் ஒரு பிரிவினர்
தொலை தூரத்துக்கு தப்பித்துச் சென்று அரசர் காலத்தில் வாழ்ந்த வாழ்க்கையையே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்
என்ற கற்பனையே ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. அதுவும் தப்பிச் சென்ற சோழர்கள் தங்களை
யாரும் பிந்தொடர்ந்து வரக்கூடாது என்பதற்காக வழி நெடுக பல ஆபத்துகளை விதைத்துவிட்டுப்
போயிருக்கிறார்கள் என்ற கற்பனையும் அவைக் காட்சிபடுத்தப்பட்ட விதமும் ரசிகர்களை ஆச்சரியத்தில்
வாய்பிளக்க வைத்தன் என்றால் மிகையாகாது.
மேலும் நரப்லி கொடுத்து நரமாமிசத்துக்காகப் போட்டி போடும்
நிலையில் இருக்கிறார்கள் என்ற கற்பனை சிலருக்கு அருவருப்பையும் எதிர்ப்புணர்வையும்
ஏற்படுத்தினாலும் சோழநாஉ சோறுடைத்து என்று நிலையில் இருந்தவர்கள் தங்கள் பாதுகாப்புக்காக
செய்த விஷயங்களால் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார்கள் என்பதே அந்தக் கற்பனையின்
அடிப்படை என்ற வகையில் அதையும் சிலர் பாராட்டினார்கள்.
நூற்றாண்டுகளாக ஒரு மக்கள் கூட்டம் வெளி உலகுக்கு தெரியாமல்
தொலை தூரத்தில் வாழ்வது பற்றியோ, நரமாமிசம்
தின்னும் நிலைக்கு ஆளானது பற்றியோ, அவர்களைக்
இருப்பிடத்தை கண்டுபிடிக்க்கும் பாதையில் பொருத்தப்பட்ட ஆபத்துகளைப் பற்றியோ தர்க்க
ரீதியான கேள்விகளை யாரும் எழுப்பவில்லை. இந்தப் படத்தை ரசித்தவர்கள் மட்டுமல்லாமல்
விமர்சித்தவர்களும் இந்தக் கேள்விகளை எழுப்பவில்லை. ஒரு ஃபேண்டஸி வகைமையைச் சேர்ந்த
படம் வழங்க வேண்டிய பிரம்மாண்ட உணர்வையும் சுவாரஸ்யத்தையும் ஆயிரத்தில் ஒருவன் ஓரளவுக்காவது
திருபதிபடித்தியது என்பதை அந்தப் படத்தின் மீது கடுமையான விமர்சனப் பார்வை கொண்டவர்களும்
ஏற்றுக்கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை.
அந்தப் படம் வெளியான காலகட்டம் அதன் கதைக்கு கூடுதல்
முக்கியத்துவத்தை வழங்கியது. 2009இல் தனித்தமிழ் ஈழத்துக்காகப் போராடிய விடுதலைப் புலிகள்
அமைப்பினரும் பல்லாயிரக்கணக்கான் ஈழத் தமிழர்களும் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை
பிரபாகரனும் துளிக்கூட கருணையற்ற எதிரிகளால் கொல்லப்பட்டார்கள். பெண்கள் அனைவரும் பாலியல்
வன்புணர்வுக்கு ஆளானார்கள். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் சோழ மன்னனும் மக்களும் எதிரிகளால்
கொன்று குவிக்கப்பட்டதையும் பெண்கள் வன்புணர்வுக்கு ஆளானதையும் இதனுடன் தொடர்புபடுத்தி
யோசிக்க இடமிருந்தது.
இரண்டாம் உலகம் இதுபோன்ற பிரம்மாண்டங்களோ சுவாரஸ்யங்களோ
எதுவுமே இல்லாத படம் என்பதால்தான் அது ஒரு ஃபேண்டஸி படமாக எடுபடவில்லை.
பூமியில் நடக்கும் காதல் கதையிலும் வழக்கமான் செலராகவன்
படங்களில் குறிப்பாக காதலை அவர் கையாளும் விதத்தில் காணக்கிடைக்கும் சிறப்பம்சங்கள்
குறிப்பிடத்தக்க வகையில் அமையவில்லை. பூமியில் நடக்கும் காதல் காட்சிகளில் ஒரு சில
ரசிக்கத்தக்க விஷயங்கள் இருந்தன. அவை செல்வராகவன் என்னும் வசனகர்த்தாவின் ஜாலங்கள்.
ஒரு ஆணைப் பார்த்தவுடன் அவன் கணவனாக்கிக்கொள்ள பொருத்தமானவனா என்று ஒரு இளம் பெண் எடைபோடுவது.
1000 ஆண்களுக்கு 800 பெண்கள் இருந்தால் மீதமுள்ள 200 ஆண்கள் என்ன செய்வார்கள் என்ற
சமுதாயத்தின் மீதான் எள்ளல் ஆகியவற்றை உதாரணங்களாகச் சொல்லலாம்.
செல்வராகவனின் கற்பனை உலகில் நடக்கும் சுவாரஸ்யமான விஷயங்களும்
அவரது வசனம் எழுதும் திறன் சார்ந்ததாகவே இருக்கின்றன.
செல்வராகவன் தோல்விகளால் துவளாதவர். மேலும் அவர் இதுவரை
இயக்கியுள்ள படங்களை அலசினால் ஒவ்வொரு படத்தையும் மிகுந்த சிரத்தையுடன் எடுத்திருப்பதைப்
புரிந்துகொள்ள முடியும். சாதாரண கதையை எடுத்துக்கொண்டாலும் அதில் தன் தனி முத்திரையைப்
பதிப்பவர். பேசப்படாத விஷயங்களைப் பேசினால் அதற்குத் தேவையான உழைப்பைப் போடுபவர். எதைச்
சொன்னாலும் தான் சொல்லும் விதத்தால் ரசிகர்களைக் கட்டிப்போடும் வல்லமை படைத்தவர். அவர்
இயக்கியுள்ள படங்களைப் பார்ப்பவர்கள் இவற்றில் ஒன்றிரண்டை மறுக்கக் கூடும். அல்லது
மேலும் சில சிறப்புகளைக் கூட்டக்கூடும்.
இது போன்ற அரிதான சிறப்புகளுக்காகவே வணிகத் தோல்வியால் பாதிப்படையாத மரியாதை என்ற அரிதான
கவுரவம் செல்வராகவனுக்குக் கிடைத்திருக்கிறது. இரண்டாம் உலகத்தில் செய்த தவறுகளை யோசித்து
அவற்றை அறவே தவிர்க்கும் கவனத்துடன் தன் அடுத்த அடியை எடுத்துவைத்தால் அவரது இந்த கவுரத்தை
காப்பாற்றிக்கொள்ளலாம்.
அதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பும்
-திரைக்கூத்து